இந்திய நாட்டின் குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ரேஸில் பாஜகவின் மூத்த தலைவர்கள் முதல் காங்கிரஸை சேர்ந்த ஒருவர் வரை இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய நாட்டின் குடியரசு துணைத்தலைவராக பதவி வகித்து வந்தவர் ஜெகதீப் தன்கர். இந்நிலையில் நேற்று முன் தினம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அன்று இரவே தனது ராஜினாமா கடிதத்தை தன்கர் குடியரசு தலைவரிடம் அளித்தது மிகப்பெரிய பேசுபொருளானது. வயது மூப்பை காரணம் காட்டி அவர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் பிரதமர் மோடி மற்றும் கேபினட் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகியதாக காங்கிரஸ் தரப்பில் இருந்து குரல்கள் எழுந்துள்ளன.
எனினும் அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த லிஸ்டில் பாஜக கூட்டணி கட்சி தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.
பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் தான் அடுத்த குடியரசு துணைத்தலைவர் என தகவல் வெளியாகி உள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், நிதிஷ் குமாரின் பதவிக்காலமும் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அவரை துணை குடியரசு தலைவராக்கி விட்டு அடுத்த பீகார் முதல்வராக வேறு ஒருவரை நிய்மிக்கலாம் என பாஜக கணக்கு போட்டு வருவதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் பெயரும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது பலரின் ஆச்சர்யத்தை எட்டியுள்ளது. எனினும் கடந்த சில நாட்களாகவே சசி தரூர் காங்கிரஸாரின் செயல்பாடுகளை விமர்சித்தும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் செயல்களை பாராட்டியும் வருகிறார். மேலும் ஆபரேசன் சிந்தூர் திட்டத்தின் அரசு தூதராக சசி தரூரையே பிரதமர் மோடி நியமித்தார். இவை அனைத்தும் அடுத்ததாக அவர் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு வருவதன் முன்னோட்டம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அடுத்ததாக இந்த லிஸ்டில் இருப்பவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங். ஐக்கிய ஜனதா தள எம்பியான ஹரிவன்ஷ் சிங் தற்போது மாநிலங்களவை துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். எனவே மாநிலங்களவை தலைவர் ராஜினாமா செய்ததை அடுத்து, அடுத்த தலைவர் நியமிக்கப்படும் வரை இவரே தலைவரின் பணிகளை மேற்கொள்வார் எனவும், நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால் இவரை அடுத்த குடியரசு துணைத்தலைவராக நியமித்தாலும் ஆச்சர்யமில்லை என்கின்றனர்.
அடுத்ததாக இந்த ரேஸில் இருப்பவர் பாஜக மூத்த தலைவரும் தேசிய தலைவருமான ஜேபி நட்டா. பாஜக தேசிய தலைவராக இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் இவரை அடுத்த குடியரசு துணைத்தலைவராக்கலாம் என மோடி தரப்பில் ஓர் எண்ணம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் தன்கரின் ராஜினாமா செய்ததில் இருந்து அடுத்த 60 நாட்களில் அடுத்த குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் நடத்தவேண்டும் என்பதால் விரைவில் இந்த கேள்விக்கான விடை தெரிய வாய்ப்புள்ளது.