பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து மற்றும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் செய்தியில், ”பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள செய்தியில், “12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள்.
வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்று, உயர் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் துணை நிலைத் தேர்வுக்கு, முழு நம்பிக்கையுடன் தங்களைத் தயார் செய்து, தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பல்வேறு வாய்ப்புகளும், புதிய துறைகளும் உருவாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாணவ மாணவியர் அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.
மாணவ, மாணவியர் அனைவரும், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து, சாதனை படைக்க இறைவன் அருள் புரியட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கப் போகும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்ச்சி பெறாத மாணவச் செல்வங்கள் மனவுறுதியுடன் மீண்டும் தேர்வு எழுதி நீங்களும் இந்த ஆண்டிலே உயர்கல்வியில் சேர வாய்ப்பிருக்கிறது. நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை பற்றிய எதிர்மறையான எண்ணங்களை விடுத்து அதனை எப்படி நேர்மறையாக எதிர்கொள்ளலாம் என சிந்திக்க தொடங்குங்கள்.
தேர்வு முடிவுகள் என்பது உங்களது வாழ்க்கை தீர்மானிப்பது அல்ல. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எனவே, மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தேர்வு எழுதுங்கள். வெற்றி பெற உங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.