2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ் மொழிப் பாடத்துடன் தொடங்கிய இந்தத் தேர்வு, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவு பெற்றது. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 தொடங்கி 28 ஆம் தேதி நிறைவு பெற்றன.
இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தொடங்கி நடைபெற்றன. இவர்களுக்கான தேர்வு முடிவுகளும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் மே 19ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாக உள்ளன. இதை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
மாணவர்கள் தங்களின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டுக் காணலாம்.
மேலும் results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தேர்வர்கள் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
அதேபோல மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம். அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். அதேபோல தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
கடந்த ஆண்டு நூலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று தேர்வு முடிவுகளை அறியும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மாநிலக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 91.55% பேர் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.