அதிமுக அரசு நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986ம் ஆண்டே அணையிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனங்களில் கலப்புத் திருமணம் செய்துகொண்டோர் 287 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத் திருமணம் செய்துகொண்ட எவரும் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தைக் கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூகநீதியில் அக்கறைகொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய ஆணையை வழங்கிடுமாறு வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.